தீபம்

புதன், 31 அக்டோபர், 2018

பயங்கரவாதி

   


பனை மரங்களை பிடுங்கி
கித்துல் மரங்களை விதைப்பாய்
என் பூர்வீக வீடுகளை சிதைத்து
இராணுவ முகாங்களை எழுப்பி
எனை பயங்கரவாதி என்பாய்

ஆலமரங்களை வீழ்த்தி
வெள்ளரச மரங்களை நடுவாய்
என் ஆதிச் சிவனை விரட்டி
புத்தரை குடியேற்றி
எனை பயங்கரவாதி என்பாய்


எனதுடலை நிர்வாணமாக்கி
இராணுவச் சீருடையை போர்த்துவாய்
எனது வீரர்களின் நடுகற்களை உடைத்து
உனது வெறிச் சின்னங்களை எழுப்பி
எனை பயங்கரவாதி என்பாய்

பிழையாய் எழுதியென் மொழியை அழித்து
உனது மொழியை திணிப்பாய்
எனது பாடல்களை அழித்து
புரியாத உன் பாடல்களையென் செவிகளுக்குள் சொருகி
எனை பயங்கரவாதி என்பாய்

எனது நிலங்களை அபகரித்து
உனது பெயர்களை சூட்டுவாய்
எல்லைகளை மெல்ல மெல்ல அரித்துண்டு
எனது தேச வரைபடத்தை
வரையுமென் கைகளுக்கு விலங்கிட்டு
எனை பயங்கரவாதி என்பாய்

ஆம், சிங்களத் தோழனே!
குழந்தைகளின் நிலத்தை காப்பவன்
பயங்கரவாதி எனில்
குழந்தைகளின் பூக்களை சேமிப்பவன்
பயங்கரவாதி எனில்
நான் பயங்கரவாதிதான்
இது பயங்கரவாதிகளின் பூமிதான்.
¤

■தீபச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இணையுங்கள்