
____________________________________
மடுமாதாவின் பெருமூச்சு
அடிபடுகிற
பூநகரி கடல் வெளியில்
உப்புக்காற்று
சுழன்று அவதிப்பட்டு திரிகிறது.
நொருங்குண்ட
முடியை அணிந்த மாதா
பரந்தனையும் தாண்டிப்போகிறாள்.
மிக அண்மையில்
வந்து உறுமுகிற ட்ராங்கியில்
எனது கடல் மிதிபடக் கண்டேன்.
வலைகளில்
வந்து மாட்டித்துடிக்கிற
மீன்களின் குருதியில்
டோறாக்கள் பயணிக்கத் தொடங்குகின்றன.
மெல்லிய இரவும்
மிகவும் பெரிய கடலும்
அடர்ந்த காடுகளும்
சனங்களை இழக்க வைத்த
இராணுவ நகர்வுகளிடம்
சிக்கித் தவிப்பதை நான் கண்டேன்.
மேற்குக் கடல் கரைகளை
இழக்க காயப்பட்டு துடிக்கிறது
கடற்கரைத் தெரு.
இரண்டு பெரும் தெருவின்
நடுவில்
மாட்டிப்புரள்கிற கடல்
திரும்பமுடியாத
திசைக்கு சென்றுவிடுகிறது.
மீன்பிடிக்கிற படகுகளை இழந்த
கரையிலிருந்து
கடல் எட்டிச்செல்கிறது.
தென்னை மரங்கள்
மணல் வெளியில் புதைய
ஆயுதங்கள் கொண்டு வருகிற தெரு
வீழ்ந்து நெளிகிறது.
கிராஞ்சியில் விமானத்தின் குண்டுகளில்
சிதறுண்ட குழந்தைகளின்
கைகளை படைகள் மீட்டெடுத்தனர்.
இராணுவ வண்டிகள்
மிதித்துத் திரிகிற கடலின்
மிகவும் பிரியமான கரையை
படைகள் தின்று மகிழ்ந்தாட
அதன் சனங்கள்
வெயிலில் விழுந்து துடித்தனர்.
பின் நகர்ந்த சனங்களின்
வீடுகள்
சங்குப்பிட்டிக் கடலில் கரைக்கப்பட
கைவிடப்பட்ட தனிமையுடன்
கிடக்கிறது மிகப்பெரிய கடல்.
இரண்டு இராணுவத்தளபதிகள்
மிதித்து
கைகுலுக்க முன்பாகவே
ஜனாதிபதியின் வெறிச்சொற்கள்
ஓலிக்கத் தொடங்கிய நாளில்
இறந்து போக
எனது கடல் வீழ்ந்த தெருவில்
காய்ந்து மிதிபடுவதை
நான் கண்டு துடித்தேன்.
----------------------------------------------------------------------------
14.11.2008 பூநகரி,புலிகள்,பின்நகர்வு,ஆக்கிரமிப்பு
1 கருத்துகள்:
its true...
கருத்துரையிடுக