முழுநிலமும் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர்
கனவின் வேர்கள் அழிப்பதற்காய் தேடப்படுகிறது
ஷெல்கள் துளைத்த சுவர்களிலும்
குண்டுகள் தின்ற வீடுகளிலும்
விமானங்கள் சிதைத்த வெளிகளிலும்
காயங்களிலிருந்து முளைவிடுகிறது கனவு.
ஊனமாக்கப்பட்ட வெறும் நிலத்தில்
உடைத்துக் கொண்டு வரப்பட்ட
புத்தரின் சமாதிக் கற்கள் சுவர்களாகின்றன
பூவரசகள் கொல்லப்பட்டு
அரச மரங்கள் நடப்படுகின்றன
கை நழுவிக் கரைந்து கசிந்து கொண்டிருக்கும் நிலத்தை
தூங்கும் குழந்தைகள்
கைகளில் நிரப்பி வைத்திருக்கின்றனர்
ஈரமாக்கப்பட்ட நிலம் எப்பொழுது காயும்?
வேலிகளும் சுவர்களும் கூரைகளும்
வேறு விதமாய் வளர்ந்து
நிலத்தை கொல்லுகின்றன
துவக்குகள் நிலம் மேயும் காலத்தில்
நிலத்திற்காய் புதைந்த உயிர்கள்
மீண்டும் முளைக்கப் பார்க்கின்றன.
தீபச்செல்வன்
அம்ருதா செப்டம்பர் 2011
0 கருத்துகள்:
கருத்துரையிடுக