------------------------------------------------------------------
எங்கள் எல்லா ஞாபகங்களையும் கனவையும்
இறுதிநாளில் களைந்தபிறகுதான் சரணடையவேண்டியிருந்தது.
தாய்மார்கள் தாங்களகவே
தமது பிள்ளைகளின் புகைப்படங்களை கிழத்துப்போட்டனர்.
சகோதரனே யுத்தத்தின் இறுதி நாட்கள் வரையிலும்
உன்னை ஏதோ ஒரு வகையில்
பதுக்கி வைத்திருந்தோம்.
கடுமையான மழை நாள் இரவொன்றில்
எங்கள் எல்லா முகங்களும்
வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றபோது
உனது முகம் மட்டுமே
எங்களிடம் எஞ்சியிருந்தது.
நீங்கள் தறித்திருந்த புகைப்படங்களையும்
நாங்களாகவே அழித்துவிடவேண்டிய தருணம் வந்திருந்தது.
தீபங்கள் இறந்துபோயிருந்தன.
நாங்கள் சரணடைந்ததாக சொல்லப்பட்ட நாளில்
அல்லது
கைது செய்யப்பட்டதாக நாங்கள் உணரப்பட்ட நாளில்
உனது கல்லறைகளையும்
தகர்த்துவிட்டார்கள் என்ற செய்தியை அறிந்தோம்.
நீங்கள் வரிசையாய் துடித்துக்கொண்டிருப்பதை
நான் கண்டேன்.
பெரிய கிடங்கொன்றில் அவர்கள் உங்களை
புதைத்துவிடப்போவதாக பேசிக்கொண்டார்கள்.
அந்தப் பெரிய சவப்பெட்டி.யில்
குருதி வடிந்து எங்கள் வாழ் நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது.
உன்னை அவர்கள் கொன்றனர் என்ற அந்த செய்தியால்
யாரும் அறியாதபடி மிக அமைதியாகவேனும்
எங்களால் அழ முடியவில்லை.
உனது மரணம் உன்மையில் எங்கு நிகழ்ந்தது
என்று தெரியாமலிருக்கிறது.
உன்னை மதிக்கிற
மாலைகளை நிரந்தரமாக இழந்து
நினைவுகள் வீழ்ச்சியடைந்திருக்க
ஒரு பெரிய சவப்பெட்டியில் தகர்க்கப்பட்ட
முழுக்கல்லறைகளினது சாம்பலையும் நிரப்பி வைத்திருந்தார்கள்.
சகோதரனே உனது புகைப்படத்தை
அம்மா விட்டு வரநேர்கையில் தனது கைகளில்
குருதி கசிந்து கொட்டியது என்கிறாள்.
உன்னை நினைவு கூறுவதற்காய் எங்களிடம் எதுவும் இல்லை.
புகைப்படத்தில் வைத்தே
உன்னை அவர்கள் கொலை செய்துள்ளனர்.
நீ நாட்டிய தென்னங்கன்றும்
வேருடன் அகழ்ந்து அகற்றப்பட்டிருக்கிறது.
உனக்காக தங்கையும் உனது குழந்தையும்
கொண்டு திரிகிற தீபம் எரிந்து கையை சுடுகிறது.
_________________________
20.11.2009
(நன்றி: வடக்குவாசல் டிசம்பர் 2009
ஓவியம் சந்திரமோகன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக