Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 30 ஜூன், 2016

சிறு பொறி


மதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில்
திரும்ப முடியாமற் போகலாம் என
எண்ணுபவனின் கால் தடம்

மரணம் சைக்கிளின்
பின்கரியலில் ஏறியமர்ந்த தெருக்களில்
உள் உறிஞ்சிய பெருமூச்சு

நெஞ்சறைகளுக்குள் எழுதியெழுதி
தனை அழித்த நாட்களில்
நிராகரிக்கப்பட்டவனின் முனகல்

தன் தாய் மண்ணில் இறங்கி விளையாட
அடம்பிடிக்கும் குழந்தை போலோரு
கவிஞனின் குரல்

அதிகாரத்தை எதிர்த்தமையால்
கொலைப்பட்டியலில் இடப்பட்டவனின்
இரகசிய முகம்

மூன்றாம் நாள் பின் மாலையில்
உனை கொல்லவிருக்கிறோம்
என அறிவிக்கப்பட்ட பின்னர்
எழுதிய பதற்றமான இறுதிக்குறிப்பு

பதுங்குகுழிக்குள் வானம் இறங்கி
இருள் கவிழ்ந்து
போர் மண்ணை விழுங்கிச்
செறித்த காலத்தில்
தெறித்த சிறு பொறி

போரிருட்டில் அலையுமொரு சிறுவன்
கையில் ஏந்திய
அணையும் தீப்பந்தத்தை சுற்றியிருக்கும்
எழுத்துக்களின் கசியும் ஒளிபோலும்
இவ் வலை*.

தீபச்செல்வன்

ஜூன்30 2016

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்


*'நீ கொல்லப்படுவாய்!' என சிங்கள இராணுவத்தால் எச்சரிக்கப்பட்ட காலங்களில் என் கவிதைகளை பாதுகாகத்தது இந்த வலைப்பதிவு. இதுதான் இறுதிக் குரலோ என்று அஞ்சியபடி பதிவேற்றப்பட்ட கவிதைகளை சேகரித்ததும் இந்தத் தளமே. எழுத்தின் தொடர்புகளை, உறவுகளை தந்ததும் இந்த தளமே. என் எழுத்துக்களை பலருக்கும் கொண்டு சேர்த்த இந்த எளிய வலைத்தளத்தை, போர் நிறைந்து மூடுண்ட கிளிநொச்சி நாட்களில் (30.06.2007) உருவாக்கி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. 

வியாழன், 9 ஜூன், 2016

கொஸ்கம II



நேற்றும் தோழி ஒருத்தி புற்றுநோயினால் இறந்துபோனாள்
காரணம் அறியா மரணங்களுக்கும்
இறந்து பிறக்கும் குழந்தைகளுக்கும்
சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கும்
வடக்கே வீசப்பட்ட கந்தக நஞ்சு வாயுவிற்கும்
தொடர்பில்லை என்றே கொள்க!

நண்பா, இன்று உனது ஊரில் குண்டுகள் வெடித்தபோது
எத்தனை விசாரணைகள்?
எத்தனை கண்டனங்கள்?
எத்தனை கேள்விகள்?
காற்றில் கலந்த விசத்தையும் அளந்தனரே!

அதெப்படி நண்பா!
எனதூரில் குண்டுகள் வெடிப்பது மாத்திரம்
கொண்டாடுதற்குரியதாய் இருக்கும்?

உலகின் குண்டுகளனைத்தையும்
முள்ளிவாய்க்காலில் நம் நெஞ்சில் கொட்டினரே?

குடிநீரில் விசம் கலப்பதுபோல
சோற்றில் விசத்துகளை பிசைவதுபோல
எம் காற்றிலும் நஞ்சைக் கலந்தனரே
விசமடர்ந்த காற்றை உள்ளிழுத்து
மூச்சடங்கினர் ஏதுமறியாக் குழந்தைகள்

கந்தகப்புகையில் ஊறிற்று முப்பது வருடங்கள்
வெடித்துச் சிதறும் குண்டுகளின்
வெடி வாசனையுள் வாழ்வு
கந்தகத் துகள் படிந்தது எல்லாவற்றிலும்

ஓ.. நாம் தமிழீழத்தவரா?
ஓ.. அவை வெடிக்கப்படவேண்டிய இடம்
எமது தேசம்தானா?

ஆம், தோழனே! எனது தேசம் முழுதும் எறியப்பட்ட
ஒவ்வொரு குண்டிலும்
எழுதாக் காரணமொன்றிருந்தது

'இது தமிழ்ழீழத்தை அழிக்கும் குண்டு'

நண்பா! குண்டுகள் அழிப்பதில்லை
கனவுகளையும் மூலங்களையும்
ஆனால், வெடிக்கும் குண்டுகளின் முன்னால்
நீயும் நானும் ஒன்றே!

ஆதலால் நண்பனே எனக்கும் உனக்கும் வேண்டும்
இராணுவமுகாங்களுமற்ற பிரதேசம்
நஞ்சு கலக்காத காற்று
மற்றும் வெடிபொருட்களற்ற பூமி.
0

தீபச்செல்வன்

கொஸ்கம இலங்கையின் தென்பகுதியில் உள்ள பிரதேசம். இப் பிரசேத்தில் உள்ள சாலாவ இராணுவமுகாமின் ஆயுதக்கிடங்கு வெடித்ததில் பிரதேசம் பெரும் அழிவுக்கு முகம் கொடுத்தது.

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்

கொஸ்கம I


கந்தகப் புகை படிந்து கறுத்த சூரியன்
பீரங்கி இரண்டாகப் பிளந்த நிலா
செல்கள் கொலைசெய்த குளங்கள்
போர் அணைகளால் துண்டிக்கப்பட்ட ஆறுகள்
பொஸ்பரஸ் குண்டுகளால் நீவப்பட்ட குழந்தைகள்
விமானங்கள் மென்ற கோயில்கள், வீடுகள், தெருக்கள்
டாங்கிகள் கிழித்த நிலம்
திரும்புமிடமெல்லாம்
வெடிகுண்டுகளை நிரப்பிய இராணுவமுகாங்கள்
திறந்த குழாய்களுடன்
வீடு நோக்கி
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்லெறிகள்
நெற்றிகளை குறிபார்க்கும் துப்பாக்கிகள்
சன்னங்கள் சித்திரம் வரைந்திருக்கும்
உடலெங்கும் வெடிபொருட்களின் பாகங்களை
சுமந்தபடியிருக்கும் ஒருவனால்
வெடிகுண்டின் சிறு பெரியினால்
சிறுபுல் ஒன்று கருகுவதைக்கூட தாங்குதல் இயலாது.
0

தீபச்செல்வன்

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்

புதன், 18 மே, 2016

முள்ளிவாய்க்கால் பரணி!







01
கால்கள் எதுவுமற்ற என் மகள்
தன் கால்களைக் குறித்து
ஒருநாள் கேட்கையில்
நான் என்ன சொல்வேன்?

அவர்கள் கூறினர்
யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென
ஒருவரும் கொல்லப்படவில்லையென
யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென

அவர்கள் கூறினர்
ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென
யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென

பின்னர் கூறினர்
போராளிகளே மக்களைக் கொன்றனரென
பின்னர் கூறினர்
படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென

இறுதியில் சொல்லினர்
யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென

எமை மீட்கும் யுத்தமென்றனர்
மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா?
மனிதாபிமான யுத்தமென்றனர்
பீரங்கியின் சுடுகுழலில் மனிதாபிமானமுண்டா?

நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்து
மேலும் அதை தொடர்ந்து
எல்லாவற்றையும் மறப்போமென்றனர்
எதையும் பகிராமல்
ஒருதாய் பிள்ளையென்றனர்

தாயற்ற என் மகளுக்கு
இதையெல்லாம் எப்படி விளக்குவேன்?

பழி வாங்கும் ஜனங்களென்றனர் ஒருபோது
மன்னிக்கத் தெரியாத ஜனங்களென்றனர் இன்னொருபோது

திரும்பாத இழப்பை
வெற்றி என்போரே!
என் மகளைக் குறித்து
நான் கண்ணீர் மல்குதல்தான்
பழிவாங்குதலா?

02
எனதாசை மகளே!
இம்மாபெரும் காயத்தை எப்படி ஆற்றுவோம்?
இம் மாபெரும் இழப்பை எப்படி நிரப்புவோம்?

காயங்களை மூடும்
இழப்புக்களை மறைக்கும்
தந்திரம் மிக்க வார்த்தை
என்னிடமில்லை

மீளப் பெறமுடியாத கால்களை மறந்து
கால்களை பறித்த வெற்றியை
கொண்டாடச் சொல்லினர்

அவர்களோ போருக்கு காரணம் சொல்லினர்
நாமோ அழிக்கப்பட்டதின் நியாயத்தை வேண்டினோம்
மகளே! போரிடம் என்ன நியாயம் இருக்கும்?

அது நம் குழந்தைகளை கருவிலே நசித்தது
அப்பாவிகளின்மீது குண்டுகளைப் பொழிந்தது
நிலத்துடன் லட்சம் மனிதர்களை
தின்று செரித்தது

எலும்புக்கூடுகளினிடையே
நிணங்களினிடையே
குருதியினிடையே
கொடி உலுப்பி மகிழ்ந்தது

அவர்கள் சொல்லுவதைப் போல
அந்தக் கணங்களை மறந்துவிட முடியுமோ?
அவர்கள் சொல்வதைப்போல
அந்தக் கணங்களை மன்னிக்க முடியுமோ?

திட்டமிட்டு செய்யப்பட்டவைகள்
மறக்கக்கூடியவை அல்லவே
வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டவைகள்
மனிக்கக்கூடியவை அல்லவே

03
ஆட்களற்ற வீடுகளைக் குறித்தும்
வீடுகளற்ற நிலங்களைக் குறித்தும்
புகைப்படங்களில் இருக்கும்
இல்லாதவர்களைக் குறித்தும்
பெயர் பட்டியல்களில் மாத்திரம் இருப்பவர்களைக் குறித்தும்
என் அன்பு மகளே என்னிடம் கேட்காதே?

இரத்தமும் சதைகளும் படிந்த
பழைய பத்திரிகைகளை
நீ விரித்துப் பார்க்காதபடி
மறைவாகவே வைத்துள்ளேன்

04
யுத்த வெற்றியின் பாடலில் மயங்கியபடி
எல்லாவற்றையுமே மறக்கும்படி சொல்லினர்
என் பிஞ்சுக் குழந்தை கால்களற்று நிற்கிறாள்
என் கால்களுக்கு என்ன ஆனது?
ஏன் என் கால்களை எறிகணைகள் தின்றனவென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?

என் தாயிற்கும்
என் ஐந்து சகோதரர்களுக்கும் என்ன ஆகிற்று?
நம் பதுங்கு குழியில் யார் குண்டு வீசினரென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?

மாபெரும் இனக்கொலையை ருசிக்கும்
பற்கள் நிரம்பிய கொடியை
என் மகளுக்கு பரிசளிக்கும்
இந்த நாட்களில் தொடங்குமொரு காலம்
எப்படியானதாய் இருக்கும்?

மேலுமொரு காயம் வேண்டாம் மகளே
மேலும் பலர் இல்லாதுபோக வேண்டாம் மகளே

05
நாம் கேட்பதெல்லாம்
உயிருக்கு உயிரல்ல
கொல்லப்பட்டவர்களை
நினைவுகூரும் உரிமையை
மாண்டுபோனவர்களின் கல்லறைகளை
அழுது கண்ணீர் விடும் விடுதலையை

நாம் கேட்பதெல்லாம்
குருதிக்குக் குருதியல்ல
அழிக்கப்பட்டவர்களுக்கு நீதியை

நாம் கேட்பதெல்லாம்
பழிக்குப் பழியல்ல
இன்னொரு இனக்கொலையற்ற அமைதிநிலத்தை

நாம் கேட்பதெல்லாம்
எவருடைய உரிமையையுமல்ல
எம்முடைய உரிமையை

எனதருமை மகளே!
நாம் கேட்பதெல்லாம்
நீதியின் உண்மையை
உண்மையின் நீதியை

உண்மைகளை நம் சடலங்ளைப் போலப் புதைத்து
இடுகாடுகளாக்கப்பட்ட நம் மண்மீது
எளிய நம் சனங்களின் குருதியினால்
பொய்யை புனைந்தெழுதிய அவர்களின் வீர வரலாறு
அழிக்கப்பட்டவர்களை உறங்கவிடாது


ஏனெனில் அவர்களின் போர்
சூழ்ச்சிகளினால் வென்றது
ஏனெனில் அவர்களின் போர்
அநீதிகளால் வென்றது
ஏனெனில் அவர்களின் போர்
விதிகளை மீறியது

05
எனதருமை மகளே!
நம்முடைய நிலத்தை அபகரிக்கவும்
தம்முடைய அதிகாரத்தை பரப்புவும்
நம்முடைய அரசை கலைக்கவும்
தம்முடைய வேர்களைப் பதிக்கவும்
நம்மை பூண்டோடு துடைக்கவும்
உனது கால்களை பிடுங்கி
உன் தாயையும்
ஐந்து சகோதரர்களையும் கொன்றனரென அறிகையில்
இந்த உலகத்தை குறித்து நீ என்ன நினைப்பாய்?

தீபச்செல்வன்

2016

ஓவியம்: றஷ்மி

பிரசுரம்: குளோபல் தமிழ் செய்திகள்

சனி, 7 மே, 2016

Non. Je ne suis pas Sri Lankais/ பிரெஞ்சு மொழியாக்கம்






நான் ஸ்ரீலங்கன் இல்லை/பிரெஞ்சு மொழிபெயாக்கம்

கவிதை- தீபச்செல்வன்
பிரெஞ்சு மொழியாக்கம் - க. வாசுதேவன்

Non. Je ne suis pas Sri Lankais!

Je possède un passeport
pour franchir les frontières,
comme un Palestinien en a un israélien

Je possède une carte d'identité
pour passer les barrières de contrôle
Comme un Irakien en a une américaine,

Je possède quelques monnaies
pour mes achats,
Comme un Syrien possède quelques Euros

On entonne un hymne national
sur ma terre,
Comme on entonne celui de l'Inde
A Manipur,

Une drapeau national est hissé
dans ma patrie,
Comme celui des Chinois flotte
en Tibet

Sur mon doigt, je porte l'emblème
du réfugié appatride,
Comme la brûlure sur la mains des Myanmarais

Auteur: Theepachelvan
Traduit par Vasudevan

க. வாசுதேவன் : ஈழத்தை சேர்ந்த கவிஞர் க.வாசுதேவன். புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்கிறார். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், என பன்முக ஆளுமைகொண்டவர். தொலைவில், அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே ஆகிய இரண்டு கவிதைநூல்களையும் தேர்ந்து எடுக்கப்பட்ட 19 நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிதைகள் என்ற கவிதை மொழிபெயர்ப்பையும் பிரெஞ்சுப் புரட்சி என்ற வரலாற்று நூலினையும் எழுதியவர்.

'Jeg er ikke Srilankeser’/நோர்வேஜியன் மொழியாக்கம்



* * *
For å krysse landegrenser
bærer jeg et pass
I likhet med Israelsk pass
i palestinernes hender

For å passere okkupantens sjekkposter
har jeg et Identitetskort
slik som Irakerne går med
Amerikanske identitetskort

For mine utgifter
Har jeg noen mynter
Akkurat som Syriske borgere
holder Euromynter i sine hender

I mitt hjemland
strømmer en nasjonalsang ut i luften
Slik som den Indiske nasjonalsangen
blir sunget i Manipur

Et nasjonalflagg er heist opp
på min jord
Samme som det Kinesiske flagget i Tibet

Fingrene mine
bærer et stempel
For å identifisere meg
som den 'statsløse flyktning'
Dette er som brannsår
på Burmeserenes hender!

* * *

- Dikt skrevet av (Tamil):Theepachelvan
- Oversatt av (Norsk): Rooban Sivarajah

Diktet uttrykker tamilenes lidelser på øya Sri Lanka ved å ta for seg lidelsene til de statsløse flytninger i forskjellige deler av verden. Tamilsk versjon av diktet var publisert i ’Anandavikatan’, en ukentlig magasin i det sør indiske delstaten ‘Tamil Naadu'.

0

புதன், 4 மே, 2016

கடற் குழந்தை



பேரலையை தின்று
பெருங்கரையில் துயில்கிறது
உறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை

செய்வதறியாது திகைத்துப்போயின பொம்மைகள்
பறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள்

கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கவிழ்ந்து மிதக்கிறது
அவன் செய்த காகிதப் படகு

அவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும்
யாருமற்று அநாதரவாக கிடப்பனுக்காய்
தலை குனிந்தன இறால்களும் நண்டுகளும்

பெருங்காற்றே நீயா அவனின் படகை கவிழ்த்தாய்?
பேரலையே நீயா அவனின் படகை உடைத்தாய்?

குடிவரவு சட்டத்தை மீறி
அய்ரோப்பியாவுக்குள் நுழைய எத்தனித்தான் என்றனர்
ஆயுதங்களை பரிசளிப்பவர்கள்
குடியகழ்வு சட்டத்தை மீறிச் சென்று
துருக்கிக்கரையில் துயில்கிறான் என்றனர்
யுத்தத்தின் முதலாளிகள்

ஏனெனில் அவன் சிரியக் குழந்தை

எதுவும் பேசாமல் குப்புறக் கிடந்தான் அய்லான் குர்தி*
குண்டு தின்று வீசிய ஈழக் குழந்தையர் போல
சன்னங்கள் துளைத்த ஆப்பகானியக் குழந்தைபோல
பிய்த்தெறியப்பட்ட ஈராக்கியக் குழந்தைபோல
துரப்பட்ட மயன்மாரியக் குழந்தைபோல
பசியால் துவண்ட சோமாலியாக் குழந்தைபோல

இன்னுமின்னும் எத்தனை தேசங்களின்
இன்னுமின்னும் எதற்காகவெல்லாம்
இன்னுமின்னும் எத்தனை குழந்தைகள்
இன்னுமின்னும் எங்கெல்லாம் வீசப்படுவர்?

ஈழக் கடற்கரையில் அன்றெமது குழந்தைகள்
கொன்று வீசப்பட்டபோது
எழவில்லை ஒரு குரலும்

ஏனெனில் அவர்கள் ஈழக் குழந்தையர்

யுத்தத்திற்கான உலகில்
குழந்தைகளுக்குச் சவக்குழியானது கடல்.
¤

தீபச்செல்வன்

நன்றி: காக்கைச் சிறகினிலே

“அய்லான் குர்தி“ ஓர் சிறியக் குழந்தை. போர் காரணமாக தன் நாட்டைவிட்டு அகதியாக வெளியேறி அய்ரோப்பாவிற்குள் நுழைய முற்பட்டபோது துருக்கில் நடந்த படகு விபத்தில் கடலில் மூழ்கி இறந்தான். அவனின் உடல் துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கியது. 



வெள்ளி, 29 ஏப்ரல், 2016

Ich bin kein Sri - Lanker/ யேர்மனிய மொழியாக்கம்


Ich bin kein Sri - Lanker

* * *

Um die Wege zu kreuzen,
habe ich einen Pass –
Wie der israelischer Pass
In den Händen eines Palästinensers.

Um Grenzen zu überqueren,
habe ich eine Identitätskarte –
Wie eine amerikanische Identitätskarte
Bei den Irakern.

Um auszugeben,
Habe ich einige Münzen. –
Wie ein Syrischer Bewohner
Mit französischen Euros.

In meiner Heimat,
Wird die Nationalhymne übertragen –
Wie die Nationalhymne von Indien
In Manipur.

In meinem Land,
Wurde eine Fahne gehisst –
Wie die chinesische Fahne
In Tibet.

Auf meinem Daumen,
habe ich eine heimatlose Flüchtlingsunterschrift –
Wie ein Brandwunde
An der Hand eines Myanmars.

Poem - Theepachelvan
translation - aswin shanmuganathan


Hinweis: "Ich bin kein Sri Lanker" - dieses Gedicht wurde von Shanmuganathan Assvin in deutscher Sprache übersetz. Er ist die nächste Generation der Tamilen, der in der Schweiz aufwuchs.

குறிப்பு 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' என்ற இக் கவிதையை புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்த அஸ்வின் சண்முகநாதன் ஜெர்மனிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.


நன்றி: பதிவுகள் நான் ஸ்ரீலங்கன் இல்லை/யேர்மனிய மொழிபெயர்ப்பு




வியாழன், 21 ஏப்ரல், 2016

நான் ஸ்ரீலங்கன் இல்லை! - II




-----------------------
வழிகளைக் கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச் சாவடிகளைக் கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல

செலவு செய்ய
என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன
சிரியப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்
பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல

என்னுடைய மண்ணில்
ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது
மணிப்பூரில் ஒலிக்கும்
இந்திய கீதம்போல

என்னுடைய தேசத்தில்
ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது
திபெத்தில் பறக்கும்
சீனக் கொடி போல

என்னுடைய விரலில்
நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது
மியன்மாரியரின் கையில்
தீயால் இடப்பட்ட காயத்தைப்போல

தீபச்செல்வன்

நன்றி - ஆனந்த விகடன்
ஓவியம் ஹப்சிகான்

வியாழன், 11 பிப்ரவரி, 2016

கவிதை எனது ஆயுதம்



என்னிடம் துப்பாக்கிகள் இல்லை
பீரங்கிகள் இல்லை
குண்டுகளும் டாங்கிகளும் இல்லை
வார்த்தைககள் மட்டுமே உண்டு

அவை என்னுடைய வார்த்தைகளல்ல
என்னுடைய நிலத்தின் வார்த்தைகள்
என்னுடைய சனங்களின் வார்த்தைகள்

துப்பாக்கிளோடு அலையும்
டாங்கிகளின் உலவும் வீரமிகு படைகள்
என் கவிதைகளுக்கு ஏன் அஞ்சுகின்றனர்?

எதிர்வீடுகளில் விசாரிப்பதுவும்
தெருவில் என் கால் அடிகளை எண்ணுவதும்
அறியாத தொலைபேசி எண்களிலிருந்து
பதிலற்று அழைப்புக்களை துண்டிப்பதுவும்

நள்ளிரவில் நாய்களை குலைக்கச் செய்வதும்
நண்பகலில் மோட்டார் வண்டியில்
உறுமியபடி செல்வதும்
என் புத்தகங்களை தேடுதல் செய்வதும்
எனை ஏதோ செய்யுமென நினைத்தனர்
வீரமிகு படைகள்
   
உன்னுடைய துப்பாக்கிகளை முறிக்கும்
குண்டுகளை நொருக்கும்
பீரங்கிகளை உடைக்கும்
டாங்கிகளை சிதறடிக்கும்
முகாங்களை அழிக்கும்
எனது வார்த்தைகளுக்கு நீ அஞ்சுவாய்

நாமோ எமது நிலத்திற்காய் 
போராடுகிறோம்
நீயோ எம்முடைய நிலத்தை அபகரிப்பதற்காய்
போர் புரிகிறாய்

ஆதலால் நீ என் கவிதைகளுக்கு அஞ்சுவாய்
என் சனங்களுக்கு அஞ்சுவாய்
என் நிலத்திற்கு அஞ்சுவாய்
0

தீபச்செல்வன்

நன்றி - தீராநதி
பெப்ரவரி 2016

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...