o தீபச்செல்வன் ----------------------------------------
எல்லா வருடங்களும்
வெறும் இரவுகளைத்தான் உதிர்கின்றன.
நான் உன்னை சந்திக்காத
எதையும் பகிராத
கடந்த வருடத்தைப்போல
இந்த வருடம்
நடு இரவில் வந்து
என்னை எழுப்பக் காத்திருக்கிறது.
போர் நமது கிராமத்தை அழித்து
கனவை முடிவுறுத்துவதாய்
முன் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிற நாளில்
இதுவரை கைப்பற்றப்பட்ட
எல்லாம் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
நீயும் நானும்
வெகு சுலபமாக புறக்கணிக்கப்பட்டு
போரால் அணுகிக்கொண்டிருக்கிற
வெளியில்
துடிதுடித்துக்கொண்டிருக்கிறது
கொண்டாட்டங்களுக்குரிய நமது வீடு.
உன்னையும் நமது சொற்களையும்
நாமிருந்து
பகிர்ந்துருக வேண்டிய வெளிகளையும்
ஒரு சாரைப்பாம்பு
மிக அமைதியாக தின்று முடிக்கிறது.
மேலும்
வருடத்தை தொடருகிறது
அலைச்சலுக்கான போரின் பிரகடனம்.
_____________________
14.04.2009
(கடந்த வருடத்தை நினைவு கூருவதற்காய் இந்தக் கவிதை பகிரப்படுகிறது)
நன்றி : இருக்கிறம் ஏப்பிரல் 2009
தீபச்செல்வன் Theepachelvan
21 மணிநேரம் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக