o தீபச்செல்வன் ----------------------------------------
எப்பொழுதும் அந்த முதல் உரையாடலை
நீ ஞாபகப்படுத்தியபடியிருப்பாய்.
சிகரட் குறைத்துண்டுகள் ஒதுங்கி குவிந்திருக்கும்
அந்தச் பாதிச்சுவரில்
அமர்ந்துகொண்டு மீளவும் மீளவும்
நாம் பேசியிருக்கிறோம்.
ஓவ்வொரு இரவும் கடைசியில் நம்மை
தனித்து பேச வைத்திருக்கிறது.
அப்பங்களை தூக்கிச் செல்லும்
உனது காலையும்
அதற்கான மாவை இடித்துக்கொண்டிருக்கும்
மாலை நேரத்தையும் நாம் இழந்துபோயிருக்கிறோம்.
போரினால் நாம் வாழ்வை இழந்து போயிருக்கிறோம்.
சிகரட் புகைக்கும் தேனீர்க்கடையின்
அருகிலிருக்கிற ஓடையில்
வரிசையாய் படிந்துபோயிருக்கிறது சாம்பல்.
அசாத்தியமாக வளர்ச்சி பெற்ற நமது நகரத்தில்
பியரை அருந்தியபடி நாம் அலைந்திருக்கிறோம்.
சாரயக் கடைகளில்
மதுக்கிண்ணங்களை தூக்கி வைத்திருத்தபடி
இருவரும் அப்பங்களை விற்கும் அனுபவங்களை
பகிர்ந்திருக்கும்பொழுது
நமது நகரம் வசீகரமான வெளிச்சத்தில்
ஒளிர்ந்தபடியிருந்தது.
நமது நகரத்திற்காக நாம் உழைத்திருக்கிறோம்.
அதை மிகவும் நேசித்திருக்கிறோம்.
கடைகளின் பின்புறமாக குந்தியிருந்து
உரையாடிக்கொண்டிருந்த பொழுது
விமானங்களுக்கு அஞ்சி பதுங்கியிருந்தபொழுது
நீ எனக்குப் பக்கத்திலிருந்தாய்.
நண்பனே சிகரட்டிற்காய் அடிபடுகிறவர்களாகத்தான்
எப்பொழுதுமே இருந்திருக்கிறோம்.
எல்லாவற்றையும் போலவே இப்பொழுது
நீ அப்பங்களை கூவி விற்பதற்கான
நமது நகரமும் இல்லை.
உனது அப்பங்களும் இல்லை.
சிகரட்டுக்களும் இல்லை.
மாவை இடித்துக்கொண்டிருக்கிற
மாலை நேரமும் இல்லை.
ஆனால் நீ நெருக்கத்தின் பெரிய உரையாடலாய்
முடியாத சிகரட்டாய்
எனக்குள் புகைந்து கொண்டிருக்கிறாய்.
அந்தப் பாதிச்சுவரின் சிதைவில்
சிகரட் துண்டுகள் என்னவாகியிருக்கின்றன?
போர் எல்லாவற்றையும் அழித்து விட்டது.
உன்னை இழந்திருக்க கூடாது.
உன்னுடன் நாம் எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம்.
கைவிடப்பட்ட உனது சடலத்தை
யாரோ கண்டு வந்ததாக சொல்லுகிறபோது
உனது அப்பம் பற்றிய
இரண்டாவது உரையாடல் தனித்துத் தொடங்கி
முடிவற்று நீளுகிறது.
எங்கு தவறிப் போயிருக்கிறாய்?
தகர்ந்து போயிருக்கிற நகரத்திற்கு நான் திரும்பப்போவதில்லை.
யாரேனும் அங்கு அப்பங்களை கூவிக்கொண்டிருப்பார்களா?
அப்பங்களை வாங்க யார்தான் காத்துக்கொண்டிருப்பார்கள்?
மூட்டத் தொடங்கும் ஒவ்வொரு சிகரட்டும்
உனக்காக புகைந்துகொண்டிருக்கிறது.
உனக்காக மது நிறைக்கப்பட்ட கிண்ணம்
எப்பொழுதும் எனக்கு முன்னாலிருக்கிறது.
___________________
08.09.2009 .கிளிநொச்சி நகரத்தின் நண்பர்களில் மிகவும் பிரியமான எனது நண்பன் ஸ்ரீகஜானாந். இறுதிப் போரில் சிக்குண்டு இறந்து போயிருப்பதாகவும் அவனின் சடலத்தை கண்டு வந்தாகவும் கூறுகிறார்கள். தடுப்பு முகாங்கள் எங்கும் தேடிய பொழுது கிடைக்கப்பெறவில்லை.
நன்றி : எதுவரை பெப்ருவரி - மார்ச் 2010
காணமல் போன பூனைக்குட்டி
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக