Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 24 செப்டம்பர், 2011

பூமிக்கு கொண்டு வரப்பட்ட பூதங்கள்

தீபச்செல்வன்

பூதங்களின் காலடியில் கரையும் வாழ்வில்
நாம் சூரியனை இழந்து
இருள்தேசத்து வாசிகளானோம்
ஒன்றுமில்லாது அழிந்த பொழுதும்
பூதங்கள் விடுவதாயில்லை
கால்களைப் பிடித்து இழுத்து வீழ்த்துகின்றன.

பூதங்கள் நடத்திய போரில்
நாம் தோற்றுப் போயிருந்த பொழுதும்
அவைகளின் பசி அடங்குவதாயில்லை
இரத்தமும் சதைகளும்
பிணங்களாய் நாறி விழைந்த களத்தில்
பூதங்கள் தின்றாடிய பொழுதும்
அவைகளின் பசி தீருவதாயில்லை
எங்களை பலியிட்டுத் தீர்க்க
பூதங்கள் எங்கள் பூமிக்கு கொண்டு வரப்பட்டன

பூதங்களை நீ பார்த்தருக்கிறாயா?
கைகளில் உள்ள கிண்ணங்களில்
குழந்தைகளின் பிடுங்கப்பட்ட கண்களை
நிரப்பித் தின்று கொண்டிருக்கின்றன.

பூதங்கள் கழுத்தில் சிவப்புப் பட்டியையோ
உடலில் இராணுவச் சீருடையையோ அணிந்து கொண்டு
பூத உடைகளைப் போர்த்தியிருக்கின்றன
நாம் குழந்தைகளின் கண்களை
பொத்தியிருந்த பொழுதுகளில்
எங்கள் மார்பை கிழித்து அவை குருதியை உறிஞ்சின.

எலும்புகளில் வடியும் குருதியை
பருகி அழிப்பின் போதையுடன்
அலையும் பூதங்கள்
சாலைகளில் இடித்தழிக்கப்பட்ட கட்டிடங்களில்
தொங்கிக் கொண்டு நிற்கின்றன
நமது தெருக்களில் வண்டிகளில் செல்லுகின்றன
அழிந்த தேசத்திலும்
நாம் வாழ்வை விடுவதாயில்லை என்ற பொழுது
பூதங்கள் எங்களை விடுவதாயில்லை
என்று துரத்திக் கொண்டிருக்கின்றன.

பூதங்கள் கொண்டு வரப்பட்ட எங்கள் பூமியில்
ஏதுவுமில்லை
எல்லாம் உறிஞ்சப்பட்ட வெறும் கூடுகளிருக்கின்றன
குழந்தைகள் இழந்தவைகளைப் பெறும்
காலத்தில் வாழ்வார்களா?
எங்கள் பூமிக்கு சூரியன் எப்பொழுது வரும்?
____________________________
10.09.2011

சனி, 9 ஜூலை, 2011

தமிழ்ச்செல்வியின் யாருமற்ற நிலம்

தீபச்செல்வன்

தமிழ்ச்செல்விக்கு ஒரு கூடாரம் இருக்கிறது
இழந்த வாய்க்கால்களையும் மணல்தரைகளையும்
அவள் திரும்பிப்பார்ப்பதில்லை
தெருக்களில் அழியாத நினைவுகள் வாடியிருப்பதையும்
அவள் பார்ப்பதில்லை
யாரிடமும் கருணையையும்
அரவணைப்பையும் எதிர்பார்ப்பதில்லை
தமிழ்ச்செல்விக்கு முன்பு அம்மா இருந்தார்.

தமிழ்ச்செல்விக்கு ஒரு குடும்பப்பதிவு அட்டை இருக்கிறது
நிவாரணங்களுக்காக அவள் முண்டியடிப்பதில்லை
அவளுக்காக வழங்கப்படும்
அரிசிப் பொதிகளையும் சுமக்க முடிவதில்லை
அவளுக்காக வழங்கப்படும் தறப்பாலையும் தகரங்களையும்
கொண்டுவர முடிவதில்லை
தமிழ்ச்செல்விக்கு முன்பு அப்பா இருந்தார்.

தமிழ்ச்செல்விக்கு முன்பு இரண்டு சகோதரர்கள் இருந்தனர்
இப்பொழுது வீட்டின் பின்பக்கமாவே முற்றித்திலோ
அவள் விளையாட நினைப்பதில்லை
அவள் மண்வீடுகளை கட்டுவதில்லை
கண்கள் மூடித் திறக்கும் பொம்மைகளை விரும்புவதில்லை
தமிழ்ச்செல்வியிடம் முன்பு சில பொம்மைகள் இருந்தன.

தமிழ்ச்செல்விக்கு முன்பு ஒரு கடவுள் இருந்தது
இப்பொழுது அவளிடம் கோயில்களும் இல்லை
செய்வதற்கு எந்தப் பிரார்த்தனைகளும் இல்லை
கடாட்சங்களையும் திருவருள்களையும் அவள் அறிந்ததில்லை
தமிழ்ச்செல்வியிடம் முன்பு அழகான உலகம் இருந்தது
இப்பொழுது அவளிடம் யாருமற்ற நிலம் இருக்கிறது.
__________________________________

நன்றி - கல்கி 


புகைப்படம் : கொக்கிளாய், புளியமுனைக் குழந்தை

செவ்வாய், 21 ஜூன், 2011

நிலமற்ற வாழ்வு

தீபச்செல்வன்

வேருடன் பிடுங்கி எறியப்பட்ட மரத்தின் இலைகள்
உதிர்ந்து நிரம்பிய யாருமற்ற நிலத்தில்
உறைந்த வீழ்ச்சியில்
கனவுகள் நிரம்பிய வாழ்வு உக்கிக் கொண்டிருக்கிறது
பறவைகள் குந்தியிருப்பதற்கு கிளைகளற்று
அழிந்த வானத்தில் அலைந்தபடியிருக்கின்றன
அழிந்த தடிகளான மரங்களில்
குதித்திறங்கும் நிலத்தின் சூரியன் காயத்தோடலைகிறது.

வாழ்வை காற்று இழுத்து தூக்கி வீசிக் கொண்டிருக்கிறது
பசிமுகங்களில் வரையப்பட்ட
அடக்குமுறையின் சித்திரங்களை
குழந்தைகள் நகமற்ற விரல்களால் கீறி வெளிகளை நிரம்புகின்றனர்.

நிலம் அழிந்து கொண்டிருக்கிறது
நிலம் தின்னும் கொடும்பறவைகள்
மகிழ்வோடு நிலப்பறவைகளை வேட்டையாடுகின்றன
சிறகுகள் கருகிய நிலப்பறவைகள் அடையும்
காலம் நிறைந்த வரலாறு மிகுந்த கனவை
பொந்துகளில் சொருகி வைத்திருக்கின்றன.

மழையும் வெயிலும் நிலப்பறவைகளை தின்னும்
காலத்தில் வாழ்வெனப்படுவது
நிலத்திலிருந்து அறுந்து அந்தரத்தில்
கயிற்றில் தொங்கியலையும் பொதியில் அடைக்கப்பட்டிருந்தது
வெறும் நிலத்தில் வேரறுந்த பறவைகள் மேலைய
வீழ்ந்த மரத்தின் சருகாகிய இலைகள் கீழலைகின்றன.

நன்றி - கணையாழி

வியாழன், 28 ஏப்ரல், 2011

சிசுக்கள் வேகும் அடுப்பு


தீபச்செல்வன்

செம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்
அடுப்புக்கள் எரியாத ஊரில்
ஏனைய இரண்டு குழந்தைகளும்
உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்
தலைவன் முட்கம்பிகளால்
கட்டப்பட்டு யுத்தப் பாவத்தை தின்கிறான்
தலைவி துயரம் துடைக்க முடியாத
பசிக் கூடாரத்தை சுமக்கிறாள்
வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்
துவக்குகளும்
இரும்புத் தொப்பிகளும் அவளை புணர்ந்து
பசி தீர்த்த இரவில்
குழந்தைகள் பசியோடு உறங்கினர்
இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று
நெருப்பு தகித்தாறாத
அடுப்பில் புதைத்தாள்
தொப்புள் கொடிகளை அறுத்து
பன்னிக்குடங்களை உடைத்தாள்
இரத்தம் பெருக்கெடுக்க
அவள் இரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்
குழந்தைகள் பசியின்றி உறங்கினர்.
_____________________
நன்றி : ஆனந்தவிகடன்

புதன், 27 ஏப்ரல், 2011

குருதிக்கடல் நிலத்தின் பெருங்காற்று



தீபச்செல்வன்

பெருநிலத்தின் கடலில் கொட்டிய குருதி
உப்பு வயல்களில் தேங்கிக் கிடக்கிறது
வெடிகள் அதிர்ந்து புகை எழும்பி
உயிர் கரைந்த நாட்களில்
வேழினியின் தந்தை
உப்பு வயல்களில் உயிர் கொட்டி விறைந்திருந்தார்
வேழியின் கண்களில் நீங்காதிருக்கின்றன
உப்பு வயல்களில் நகர்ந்த
வியர்வைகளும் குருதிகளும்.

நிலத்திற்காய் கொட்டிய குருதி
காயாமல் பிசுபிசுக்கிறது
வேழியின் கண்களை நிலம் கொள்ளையிடும்
கைகள் குத்துகின்றன
அன்றெமது நிலத்திற்காய்
இதே தெருவில் பற்றைகளினூடே
வெடிகளை சுமந்து சென்றவர்கள் நகரும் பொழுது
குருதி பெருக்கெடுத்துக் கொட்டியது.

இன்றெம் நிலத்தில்
மிகக் கொடும் கைகள் விளைந்திருக்கின்றன
நிலம் அள்ளும் கைகளின் நகங்கள்
உப்பு வயல் கடல் நிலத்தில்
வளர்ந்து கண்களையும் முகத்தையும் குத்துகின்றன.

அன்றெமது கொடி பறந்த தடிகளில்
நிலத்துயரம் பறக்கிறது
வெடி சுமந்து சென்றவரின்
தாங்கியில் வேறுகதைகள் எழுதப்பட்டுள்ளன
உப்பு வயல்களில் முளைத்து
இன்னும் உயிரோ கிடந்து
துடிக்கிற வார்த்தைகள் பிடுங்கப்படுகிறது.

நிலம் அள்ளித் தின்ற கைகள்
எப்பொழுதும் தெருவால் செல்பவர்களை மிரட்டுகின்றன
கனவின் குருதி வயல்களில் உயிர்கள் மணக்கின்றன
உப்பு வயல்களில் மீண்டும் மீண்டும்
முளைக்கின்றன வெடி சுமந்தவர்களின் முகங்கள்.

இந்தக் கடல் நிலம் அடிமையாக்கப்படதை
வேழினி தாங்க முடியாது துடிக்கிறாள்
எப்பொழுதும் காதுகளை நிரப்பியபடியிருக்கும்
குருதிக் கடல் நிலத்தின் பெரும் உப்புக்காற்று
வெடி சுமந்தவர்களின் கதைகளை கூவியபடியிருக்கிறது.
2011
______________________
நன்றி : ஆனந்தவிகடன்

செவ்வாய், 22 மார்ச், 2011

உறங்காத நிலம்


தீபச்செல்வன்

நிலமும் உயிர்களும் உறக்கமற்றலைகிற
காலத்தில்; நீ உறங்காதிருக்கிற இடத்தை நானேறிவேன்
விதைகள் நிறைந்த நிலத்தை
நிலம் தின்னும் பெருங்கால்கள் மிதிக்கின்றன
உன்னைப்போலவே எல்லோரும்
உயிரோடு புதைக்கப்பட்டவர்கள்
அதனால் இந்த நிலம் இடையிடையே துடித்தசைகிறது
இரத்தமும் கண்ணீரும் கனவும் காதலும்
எல்லா இடங்களிலும் கசிகிறது.

நீ உறங்கா நிலத்தில் பேய்கள் பசியோடு அலைகின்றன
நிலத்தை கொள்ளையிட்டு
வண்டிகளில் வெட்டி ஏற்றிக் கொண்டு போகும் இரவில்
நீ என்ன செய்வாய்?
என்னைக் குறித்து நீ வைத்திருக்கும்
வார்த்தைகளை என்ன செய்வாய்?
உன் கூந்தல் முடிகள்
நிலத்தில் கலந்து எப்பொழுதும் பறக்கின்றன.

உன்னை முத்திமிட துடிக்கும் தருணங்களில்
நீயும் நானும் கலந்த நிலத்தை முத்தமிடுகிறேன்
வாழ் நிலத்தின் கீழாய் நீ என்னை தேடி அலைகிறாய்
அங்கு தெருக்கள் இருக்கின்றனவா?
நமது பிரியத்தை பகிரும் வெளிகள் உள்ளனவா?
குருதியில் உறைந்திருக்கிற
நம் பெருங்கனவைப்போல நமது காதலும் உயிரோடிருக்கிறது
நம் காதலைப்போல கனவுக்கும் மரணமில்லை
நான் உன்னை மணல்வெளிகளை கிளறியும்
சிறுகடலில் மூழ்கியும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

தோல்வியின் பின்னரான பிரிவின் தனிமை
என்னைக் கொல்லும் இருளால் நிரம்பிக்கொண்டிருக்கிறது
உன் முத்தங்களில்லாத காலத்தில்
எனது வானம் இருண்டு கிடக்கிறது
உன்னைக் குறித்து
நமது நகரமும் நிலமும் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது
கனவு மக்களின் தாகங்களுடன்
நமது முத்தத்தின் ருசியையும் இந்த நிலமறியும்
உறங்காத நிலம் மீண்டும் முளைப்பேன் என்கிறது
கனவோடு காலத்தோடு பொழுதுகளுடன்
மீண்டும் நீ காதல் நிலத்திலிருந்து முளைப்பாயா?
 ___________________

நன்றி : அம்ருதா

திங்கள், 7 மார்ச், 2011

போரின் குழந்தைகள்




தீபச்செல்வன்
 
ஒரு தடியையோ சில கட்டைத் துண்டுகளையோ இந்தக் குழந்தைகள்
எடுத்துச் செல்கின்றனர்
சிறிய குழிகளையோ சிறிய பற்றைகளையோ
அவர்கள் தேடிச்செல்கிறார்கள்
மிக நீளமான தூரத்திற்கு
அவர்கள் எறியும் கற்கள் சென்று விழுகின்றன
இரத்தம் வடிந்து கொண்டிருப்பதற்கு குங்குமத்தை அல்லது
கடதாசிப் பூக்களை கரைத்து அப்பிக் கொண்டு
பழைய சீலைத்துணிகளை கட்டிக் கிடக்கிறார்கள்.

வயற்கரை தென்னைமரங்களில்
மீண்டும் இளநீர்கள் காய்த்திருக்கின்றன
பெயர்த்து துரத்தப்பட்ட சனங்கள் குடியிருந்த
தொகுதிக்கு யாரும் திரும்பவில்லை.
லூர்த்தம்மாவும் அபிராஜிம்
சைக்கிளை எடுத்துக் கொண்டு எல்லாத் தெருக்களுக்கும் செல்கின்றனர்
கோணாவில் குளத்தில் தாமரைகள் பூத்திருக்கின்றன.

லூர்த்தம்மாவின் கண்கள் சிவக்கின்றன
அபிராஜின் கைகள் காய்த்துப் போயிருக்கின்றன.

ஒளிந்து விளையாட அவர்கள் நினைக்கும்பொழுது
பதுங்குகுழிகள் மிக அருகில் இருக்கின்றன
கூடாரங்களோ குழந்தைகளின் வார்த்தைகளை
தாங்கமுடியாதசைகின்றன
கூடாரங்களை சிலவேளை குழந்தைகள் கழற்றி விடுகின்றனர்.

மீண்டும் வயல்களுக்குள் இறங்குபவர்களையும்
லூர்த்தம்மா பார்த்துச் செல்கிறாள்.
சின்னக்கோயிலில் தீபம் வைக்கும் அபிராஜின்
கண்களில் பனித்த இரவுகளின்
சித்திரவதைகள் எரிந்து கொண்டிருந்தன
லூர்த்தமாவின் கைகளில் கொடுக்கப்பட்ட
துப்பாக்கிகளை பறித்து விட்டனர்
அபிராஜிடமிருந்த குண்டுகளை பறித்து விட்டனர்.

தோட்டக்களை எண்ணி கணக்கு பார்க்கவும்
குண்டுகளை அடையாளம் காட்டவும்
வெற்று செல்பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கவும்
மிதிவெடிகளை தூக்கிச்சென்று பின்வளவுகளில் போடவும்
இந்தக் குழந்தைகள் பழகியிருக்கின்றனர்
சிங்களப் பெயர்பலகைகளால் எச்சரித்திருக்கும்
சில வீதிகளுக்கு செல்லாதிருக்கவும்
உயரமான வேலிகளால் மூடப்பட்ட வீடுகளுக்கு தூரமாகச் செல்லவும்
அறிவுருத்தப்பட்டிருக்கின்றனர்
அரிக்கன் லாம்புகளை குழந்தைகள் தூண்டி விட்டு
குப்பி விளக்குகளை கைகளில் தூக்கிச் செல்லுகிறார்கள்.

லூர்த்தம்மா இழுத்துச் செல்லப்பட்ட தெருக்களில் இப்பொழுது
மிதிவெடிகள் பதுங்கியிருக்கின்றன
அபிராஜ் ஒளிந்திருந்த காணிகளுக்குள் பிரவேசிக்க முடியாதபடி
அபாய வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன
லூர்த்தம்மாவையும் அபிராஜியையும்
இழுத்துச் சென்றவர்கள் மீண்டும் தெருக்களில் திரிய
கையசைத்து
வரிசையாய் சென்றவர்களது உடல் நிலம் அழிக்கப்பட்டிருக்கிறது

சனங்களின் குருதியால் சிவந்த நிலத்தில்
குழந்தைகளுக்காக
எஞ்சிய வெடி பொருட்களின் பாகங்களைத் தவிர ஒன்றுமில்லை
எல்லாவற்றின் முன்பாகவும் குழந்தைகள் செல்லுகின்றனர்.
_______________________

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

உள் நுழைய அஞ்சும் நகரின் தெருக்கள்


0 தீபச்செல்வன் ----------------------------------------
01.
யாரும் உள் நுழைய அஞ்சும் தெருக்கள்
எங்கள் நகரில் அதிகம் உள்ளன.
பிரமாண்டமான நிகழ்வென்றில்தான்
நகரத்திற்கு செல்லும் அவசியமான தெருவில்
மறித்துக் கட்டப்பட்டிருந்த
இராணுவச் சங்கிலிகள் கழற்றப்பட்டன.

எப்பொழுதோ சனங்கள் வாழ்ந்ததிற்கான அடையாளங்களை
இன்னும் தன்னில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது
நகரின் உட்புறமாய் சிதைவடைந்திருக்கிற தெரு.

இந்தத் தெரு நான் பிறந்த காலம் முதல்
இன்று வரை முடப்பட்டிருந்தது
நான் எனது காலங்களையும் இழந்ததைப்போல
இந்தத் தெருவையும் இழந்திருக்கிறேன்.

தடைபோடப்பட்ட இந்தத் தெருவிலும்
நான் குழந்தைகளை தேடுகிறேன்
குழந்தைகள் வாசித்து பயப்பிடும் கதைகளை எல்லாம்
இந்தத் தெருவின் சுவர்களின் நான் வாசிக்கிறேன்.

இன்னும் மூடப்பட்டிருக்கிற நிலங்களுக்குச் செல்லும்
காலங்களுக்காக உயிரை பிடித்து
வைத்திருக்கும் வயது முதிர்ந்த என் தந்தையின் தாயிற்கு
நான் என்ன சொல்ல.
புற்கள் வளர்ந்து முடிப்போயிருக்கும்
அவரின் கனவு நிரம்பிய
வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் இலட்சியத்தை
நீ எப்படி புரிந்து வைத்திருக்கிறாய்.
ஒரு பைத்தியக்கார கிழவியாய் மரித்துவிட்டுப்போ
என யாரோ சொல்லுவதாய்
அவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்
அவர் அலையத் தொடங்கியது எப்பொழுது?

காயங்களுடன் உள்ள நகரின் உள் பக்கத்தில்
இன்று அனுமதிக்கப்பட்ட தெருவில்
சென்று கொண்டிருக்கிறேன்
வெடியேந்தி கடலின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்
பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்ட
படகு ஒன்று தரித்து நிற்கிறது.
கடலில் கரைந்து போன அவளது சொற்களையும்
அதற்கிடையிலிருந்த ககைளையும் நான் வாசித்தேன்.
யாரும் உள் நுழைய முடியாத தெருக்கள்
எங்கள் நகரல் அதிகம் உள்ளன.
சிதைந்த நகரம் மபெரும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துக் கொண்டிருக்கிறது


02
தெருக்களில் செல்ல அஞ்சுகின்றன குழந்தைகள்
திறபடாத தெருக்களை குறித்து
என் குழந்தைகள் எல்லாவற்றையும்
அறிந்து வைத்திருக்கிறார்கள்
ஒரு இராணுவ வாகனமும் அதன் சத்தங்களும் என்று
அதிகாரம் எப்பொழுதும்
பயணம் செய்துகொண்டிருக்கிற வழிகளில்
இந்தக் குழந்தைகள் பாடசாலை செல்ல அஞ்சுகின்றனர்.

எங்கள் நகரின் எந்தத் தெருவும் மிக நீளமாக செல்லுவதில்லை
அது ஆபத்தான முட்கம்பிகளில் முடிந்து போகலாம்
அனுமதிக்கப்படாத அறிவிப்பு பொருத்தப்பட்ட
வேலியில் நம்மை மோத வைக்கலாம்
முடிவில்
தண்டனைகளுக்கான முறைகளை அது சொல்லியபடியிருக்கும்.

நாங்கள் ஆண்டுக்கணக்கில் காணாதிருந்த
தெருவை ஒரு நாள் திறந்து விட்டார்கள்.
பசியின் குரூரம் உறைந்த நாட்களின்
தெருவுக்கான தவத்தை முடித்துக் கொண்டு
வீதியப் பார்க்கிறோம்.
சிதைவுகளைத் தவிர ஒன்றையும் எங்கள் தெருவில் விட்டுவைக்கவில்லை
அழிவினால் மாற்றங்களுக்குள்ளான
இந்தத் தெருவுக்குள் நுழைய நாம் அஞ்சுகிறோம்.
எல்லா அநியாயங்களையும்
மென்முறையிலான ஆக்கிரமிப்புக்களையும்
எதிர்ப்பதற்கு திரணியற்ற அவற்றை நிறுத்துவதற்கு வழியற்ற
ஆக்கிரமிப்பினால் அதன் அதிகாரத்தினால்
மூடுண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்
கிழவியின் உயிர் தனக்குள் சொல்லிக் கொள்கிறது
தெருவின் கதைகளை.


03
தெருக்களில் வடிந்த குருதி காய்ந்து
படிந்து போயிருக்கிறது
தெருக்களில் கொல்லப்பட்ட உயிர்கள்
நசிந்து ஒட்டிப்போயுள்ளன
தெருக்களில் எழுதப்பட்ட கனவு வார்த்தைகள்
மிதிபட்டு உடைந்து போயுள்ளன
நீ அறிவாய் இந்த தெருவில் நடப்பதற்காய்
நாம் இழந்தவைகளின் உறைந்து போன கதைகளை.

இந்தக் குழந்தைகள் உலவ தெருக்களை அனுமதியுங்கள்
திறக்கப்பட்ட தெருக்களை குறித்து நாம் கைகள் தட்டுகிறோம்
மூடப்பட்ட தெருக்களை திறந்து விடுங்கள்
தெருக்களை அள்ளிச் செல்லும் அபகரிப்பாளன்
எப்பொழுதும் திரிவதாக குழந்தைகள் பயம் கொள்ளுகின்றனர்.

இந்த நகரம் சிதைவின் பின்னர்
ஆக்கிரமிப்பாளர்களினால் கைவிடப்பட்டிருக்கிறது
நகரத்தை ஆக்கிரமிப்பவர்கள்
தெருக்களை ஆக்கிரமிப்பவர்கள் அவற்றை
தமது அரண்களாக்கி எம்மிடமிருந்து பறித்து விடுகின்றனர்
அல்லது சிதைத்து கைவிடுகின்றனர்.

யாரும் உள் நுழைய முடியாத தெருக்கள்
எங்கள் நகரில் அதிகம் உள்ளன.
இன்னும் உள் நுழைய அனுமதிக்கப்படாத நகரங்கள்
எங்கள் மண்ணில் அதிகம் உள்ளன.
___________________
ஏப்பிரல் 2010

புகைப்படம் - யாழ் நகரில் உள்ள மின்சார நிலைய - மனிக்கூட்டுக்கோபுர வீதி சுமார் 15 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டது

நன்றி -  தீராநதி டிசம்பர் 

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

எனது நிலத்திற்காக பிரார்த்தியுங்கள்!


0 தீபச்செல்வன் ----------------------------------------

வீழ்ந்து துயரம் விளைந்து மூடிய நிலத்தை
துண்டாக்கிச் செல்ல வரும் கைகள் விடும் கட்டளைகளால்
இன்றெமது நிலம் துடித்துக் கொண்டிருக்கிறது.

மீண்டும் ஒருமுறை பெயர்ந்து செல்லுமாறு
சனங்கள் பணிக்கப்பட்ட வேளையில்
குழந்தைகள் வெருண்டழுது
கைகளால் நிலத்தை தொடுகின்றனர்
ஆறுகள் நிலத்தை முத்தமிட்டுச் செல்லும் மழைநாளில்
ஈரமாகி செழித்த நிலம் கொதித்துக் கிடக்கிறது.

விரக்தியையும் ஏமாற்றத்தையும்
தவிர என்னிடம் எதுவுமில்லை
கொள்ளைக்காரர்கள் நம்பிக்கையை முறியடிக்கிறார்கள்
மீண்டும் மீண்டும் நிலத்தில் எத்தனை கைகள் உதைக்கின்றன?
நிலத்தை அள்ளிச் செல்ல
எத்தனை விதிகளை எழுதுகின்றன?
பிறந்து கிடந்த நிலத்தை கொள்ளையடிக்க
எத்தனை வடிவங்கள் அலைகின்றன?

வல்லமை அழிந்து கடவுள்களால் கைவிட்ட
துயரைத் தின்று களிக்கும் காலத்தில்
எனது நிலத்திற்காய் பிரார்த்திப்பாயா தோழனே!

அமைதியற்று தெருக்களில் பறிக்கப்பட்ட நிலத்தின்
பறிக்கப்பட்ட நிருபங்களுக்காக
அலையும் சனங்களிடம் இல்லை துளிர்விடும் வார்த்தைகள்
குந்தியிருக்கும் நிலங்களை தின்று
சனங்களை வதைக்கும் காலம் நம்மை அச்சுறுத்துகிறது
வாழ் நிலக் கனவின் வாக்குமூலங்களை நிராகரித்து
நிலத்துடன் கொல்லப்படுகின்றனர் சனங்கள்.

கைவிடப்பட்ட சனங்களுக்காய்
நிலத்திற்காய்
அழுதலையும் குழந்தைகளுக்காய்
குந்தியிருக்க ஒரு துண்டு நிலத்திற்காய்
பிரார்த்தனை செய் தோழி!
தாழ் நிலம் மேலுமாக தாழ்த்தப்படுகிறது
ஆறுகளுடன் மருதமரங்கள் துடித்தசைகின்றன.

தவிக்கும் தாயே உனது கண்ணீரும்
உன் பிள்ளைகளின் குருதியும்
இந்த ஆற்றில் பெருக்கெடுத்துச் செல்கிறது
தாழ் நிலக்குழந்தைகளே நாம் எங்கு செல்வது?
குருதியும் கண்ணீரும் காயாத நிலத்தை
துயர் இன்னும் ஈரமாக்குகிறது.

தெருத் தெருவாக, கிராமம் கிராமமாக
நகரம் நகரமாக
நிலத்தை அள்ளிச் செல்பவர்களின்
அகலமான கைகள் நிலமீதலைகின்றன
தயவு செய்து
எனது நிலத்திற்காக தொடர்ந்து பிரார்த்தியுங்கள்!
______________________

நம்பர் 2010

குறிப்பு :- நான் வசிக்கும் இரத்தினபுரம் தாழ்நிலப்பகுதியில் உள்ள 25 இற்கு மேற்பட்ட குடிகளை நிலத்தை விட்டு பெயர்ந்து செல்லுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரை அண்டி புறநகர்ப் பகுதியிலுள்ள இரத்தினபுரம் கிராமத்தில் வசிக்கும் இந்த மக்கள் கிளிநொச்சியினை பூர்வீகமாக் கொண்டவர்கள். 


செவ்வாய், 30 நவம்பர், 2010

யாழ் நிலம்

0 தீபச்செல்வன் ----------------------------------------

01
குடா நிலத்தின் யாழேசை காயமுற்றொலிக்கிறது
நிலம் அள்ள வரும் கைகள்
யாழை இழுத்து பிய்த்துடைக்கின்றன
இந்த யாழ் உடைந்து போகட்டும்!
அல்லது எரிந்து சாம்பலாகட்டும்!!
என்று அறிவிக்கப்படாத பிரகடனங்களுடன்
யார் யாரோ வந்திறங்கி
யாழெடுத்து எறிகிறார்கள்
வானத்தை பிளந்து எட்டி முகங்களை மறைக்கும்
விளம்பரப்பலகைகளின் நிழலில்
அடுக்கிவிடப்படட குளிரூட்டும் இருக்கைகளில்
அமர்ந்திருப்பவர்களின் கைகளிலுள்ள
கிண்ணங்களில் யாழின் சாம்பலிருக்கின்றன

யாழ் நகரில் வேறொரு பாடலை யாரோ ஏற்றிவிட்டு
யாழோடு நிலத்தை
யாரோ சாம்பலோடு கிண்ணகளில் போட்டுத்
தின்று கொண்டிருக்கின்றனர்
நகரெங்கும் நிலமெங்கும்
உடைந்த யாழ்கள் கால்களுக்குள் மிதிபட
யாழ்நிலத்தில்
நரம்புகள் அறுந்தெழும் துடிப்போசையை
அன்றைய மாலைநேரம் அவர்கள் தின்றாடினர்

02
தங்கள் பூர்வீக நிலங்களை அறிந்திராத
அகதிகளின் குழந்தைகள்
யாழறியாது புகையிரத வழியில் உறங்க
உச்ச பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்
வீடுகளற்று தெருக்கரையில்
தெருக் குழந்தைகளாய் காட்சியாயிருக்கிறார்கள்.

புகையிர வண்டிகள் மீண்டும் வரப்போகின்றனவா?
நுழைய அனுமதிக்கப்படாத
வலயத்திற்குள் குருதிச்சதை படிந்த சக்கரங்களுடன்
செல்லப் போகின்றனவா?
நிலத்திற்காய் அலைபவர்களை
தங்கள் வழிகளுக்காக பலியெடுக்கப் போகின்றனவா?

புகையிரத வழியிலே பிறந்த
இந்தக் குழந்தைகள் புகையிரதங்களையும் பார்த்ததில்லை
வீடுகளை அறிந்திராத
இந்தக் குழந்தைகள் ஒரு நாளும் புன்னகைத்ததில்லை
தினசரி தங்கள் பாதங்களால்
புகையிரத வழியின் பெருங்கற்களை நொருக்குகின்றனர்


03
நமது குழந்தைகளின் கைகளில் பொம்மைகள் இல்லை
பொம்மை வெளியாகிப்போன
வாழ்வில் பிறக்கும் இந்தக் குழந்தைகள்
பொம்மைகளுக்குப் பதிலாக
குப்பைபகளை அணைத்தபடி
யாழுக்குப் பதிலாக
கழிவுத் தகரங்களை வாசிக்கின்றனர்

யாரும் எழுந்திரா காலையில் குப்பைப் பைகளுடன்
கூடாரங்களுக்கு வருகின்றனர்
எல்லாத் திசைகளிலிருந்தும் வரும்
குப்பைகள் பெருகும் நகரின் ஓதுக்குப்புறங்களில்
இலையான்களுடன் பழகி
குப்பைகளை நம்பி பிறந்து
குப்பைகளுடன் வளர்கின்றனர்.

குப்பைகளில் பொறுக்கி வந்த
புத்தகப் பைகளை மைதீர்ந்த பேனாக்களை
பொம்மைகளின் தலைகளை
என்னவென்று இவர்கள் கேட்கின்றனர்?
குப்பை வாசனையடிக்கிற இந்தக் குழந்தைகள்
முத்தமிடும் பொழுது யாழ்நெஞ்சின் நரம்புகள் வெடிக்கின்றன.

04
சாம்பலை மூடிய சுவர்கள்
அதிர்வினால் உடைந்து போய் விடுமோ?
மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகங்கள்மீது
அவர்கள் கற்களோடு தீப்பந்தங்களை எறிய முற்படுகிறார்கள்
ஒட்டி உலர்ந்த சுவர்களில்
படிந்திருக்கிற சாம்பலை கிளற முற்படுகிறார்கள்
நமது நிலத்தைப்போல
எல்லா வகையிலும் காட்சிப் பொருளாக
புரிந்து கொள்ளாமலே இருக்கின்றன நமது புத்தகங்கள்
இந்தப் புத்தகங்களை விரிக்கும் பொழுது
சாம்பல் உதிர்ந்து கொட்டுகிறது
இவர்கள் எங்கள் சாம்பலையும் திருடிச் செல்கிறார்கள்.
தாள்கள் மாற்றப்பட்ட நமது புத்தகங்களில்
புதிய கதைகள் எழுதப்பட்டு சேகரிக்கப்படுகின்றன

இவர்களும் தீ மூட்டிய தடிகளுடன் வந்தார்கள்
சிரில் மாத்தியூவும்
காமினி திஸ்ஸநாயகேவும்
சாம்பல் வழியும் எரிந்த புத்தகங்களை தின்றுழல்வதை பார்த்தனர்
அவர்களில் இன்றைய அரசர்களின் முகங்களை கண்டனர்
வெறிவழியும் நினைவுகளுடன்
புத்தகங்களை தூக்கி எறிந்தனர்
பிள்ளைகளுடன் கொல்லப்பட்ட நூல்களுக்காகவும்
துடிக்கும் தாய்மார்களை
இவர்கள் இன்னும் புரிவதாயில்லை
சத்தமில்லாது காதோரமாய் ஒலிக்கும்
நமது நிலச் சனங்களின் கதைகளை
கிழித்தெறிய கொடுங்கைகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன
யாழ் நகரமெங்கும் அன்றைய மாலை
கிழிந்த எங்கள் புத்தகங்கள் பறந்தலைந்து கடலில் படிந்தன.

புத்தகங்களின் உயிர்கொல்ல
இன்னும் கொடும் தீப்பறவைகள் வட்டமிடுகின்றன
நமது புத்தகங்களுக்கு எதிராகவும்
இவர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள்

06
துப்பாக்கிகளாலும் அதிகாரச் சீருடைகளாலும்
நாங்கள் துரத்தபப்பட்ட பகுதியில்
யாரோ வந்தமர்கிறார்கள்
எங்களிடம் உள்ள இடர் நிரூபங்கள்
கொடுங் கைகளால் கிழித்தழிந்து போயிருக்கின்றன
கொண்டு வந்திருக்கிற குளிர்ந்த நிரூபங்கள்
இந்த நிலம் உங்களுக்குச் நமக்குச் சொந்தமில்லை என்கிறது.

தங்கள் பெரும் மலைகள் போதாது என்று
எங்கள் நிலத்தில் பங்கு கேட்டு
மண்ணுக்கடியில் இருக்கும் தொன்மைப்பொருட்களில்
புத்தரின் அரசமரக் கதைகள் எழுத முற்படுகின்றனர்.

கண் திறாதக்காது உறங்கும் புத்தரே
எங்கள் நகரமும் நாங்களும் எரியூட்டப்படுகையிலாவது
கண் திறந்திருக்கலாம்
அகலக்கால் வைத்திருக்கிற புத்தர் சிலைகள்
இராணுவ சீருடையணிந்து
கண்களை இறுக மூடியபடி நகர்கின்றன
கண்களற்ற புத்தரே
யாழெடுத்த தெருவில் எல்லாம்
உமது புதல்வர்கள் துவக்கெடுத்திருக்கின்றனர்
வாழ் நிலத்திற்காக அழும்
எங்களின் நிலத்தை துண்டாடிச் செல்லவும்
துகள்களை அள்ளித் தின்னவும்
உமது கொடும் கைகள் நீள்கின்றன


கடலே இங்கு யார் வந்திறங்கினர்?
கடல் நகரச்சனங்களின் இடிந்த வீடுகளில்
யாராலும் படிக்கப்படாத
துயர்க்காலக் கதைகள் படிந்திருக்கின்றன
அந்நிய வேரோடும் மரங்களின் விதைகளை
நமது நிலத்தில் யார் தூவினார்கள்?
நம் கடல் பெருங்காயத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
யாழின் வாய் உடைந்து வார்த்தைகளற்றிருக்கிறது
__________________
2010

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...