Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 16 பிப்ரவரி, 2012

இடம்


நான் எப்பொழுதும் இல்லாதிருக்கிறேன்
பெருங்காட்டில் இடமின்றி
அலையும் விலங்காய்
பெரும் வான வெளியில்
இடமற்று அலையும் பறவையாய்
திசைகளின்மீது
வெளிகளின்மீதும் வீழ்க்கிறேன்
எனது பொருட்களெல்லாம் எறியப்பட்டன
சுவரின்றிக் கிடக்கும்
புகைப்படங்களில் அழியும்
நினைவுகள் பறக்கின்றன
தொல்பொருட்களைத் தொலைத்தேன்
எதையும் சேகரிக்கவில்லை
மாபெரும் இப்பூமியில்
எனக்கென்று ஒரு இடமற்று இருக்கிறேன்.

தீபச்செல்வன்

நன்றி : மல்லிகை ஆண்டு மலர் 2012

சனி, 28 ஜனவரி, 2012

பறவைகள் வீழ்ந்த நிலம்

தீபச்செல்வன்

நான் எதுவரை நிலம் பற்றியே பாடிக் கொண்டிருப்பேன்?
நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்படும்வரை
குழந்தைகளின் கைகளில் நிலத்தை 
உறுதியாய் பிடித்து வைத்திருக்கும்வரை
நான் நிலம் பற்றி பாடிக் கொண்டிருப்பேன்
பறவைகளின் காட்டில் குழந்தைகள்
நிலத்தின் வார்த்தைகளை ஒளித்து வைத்திருந்தனர்.

இன்று அந்த நிலத்தில் பறவைகள்
துடித்து விழ அந்நியக் குடிகள்
நிலமூன்றிக் கொண்டன
வெட்டிக் காயப்படுத்தப்பட்டு
நலிந்த மரங்களில் இன்னும் ஏதேனும் பறவைகள்
தொங்கிக் கொண்டிருக்கின்றனவா 
என்று தேடும் குழந்தைகள் 
நிலம் அள்ளப்பட்ட அரசியல்க் குழிகளில் வீழ்கின்றனர்.

நிலத்திலிருந்து நாம் துரத்தப்படுகையில்
எல்லாப் பறவைகளும் வீழந்த
நிலத்தின் இருதயத்தைத் தின்னும்
அந்நியக் குடிகள் விழுங்கினர் கடல்வெளிகளை
பொறியாய் நுழைந்த
சிங்கங்கள் நிலத்தை வேட்டையாடின.

மணல்வெளியில் புதிதாய் பதியும்
கால்கள் எழுதும் கதைகளால் 
சிறுவன் குளத்து மீன்கள் துடித்திறந்தன
அந்நியப் பெயர்களால்
கொல்லப்பட்ட கிராமங்களில் 
புத்தரின் ஞானம் அமைதியைத் தின்கிறது.

எல்லாம் பட்டு வீழந்த பிறகும்
குழந்தைகள் நிலத்தின் பாடல்களை 
பாடிக் கொண்டிருக்கின்றனர்
குழந்தைகள் நிலத்தை இழந்ததை
நான் எப்படி பாடாமலிருக்க முடியும்?

நன்றி - புது எழுத்து மார்கழி 2011

புதன், 25 ஜனவரி, 2012

சிறுவர்கள் பீரங்கிகளை முறிப்பார்கள்

சிறுவர்களுக்கு எதிராக நிற்கின்றன
பீரங்கிகளும் துப்பாக்கிகளும் விமானங்களும்

துப்பாக்கிகள் என்ன செய்யப்போகின்றன?
ஒன்றில் அவை சோர்வடைந்து சரிந்து போகும்
அல்லது கூர்மையடைந்து முகங்களைக் கிழிக்கும்

நீதான் புரட்சியை ஆயுதமாக்குபடி நிர்பந்திக்கறாய்
எதிர்ப்பை கிளப்பும் களத்தை திறக்கிறாய்
புரட்சியையும் எதிர்ப்பையும் எப்படிக் கொல்வது?
சனங்களை அடக்கும்பொழுது
குருதியில் புரட்சி பெருக்கெடுக்கிறது

வாழ்வின் இனிய பாடலை
நாம் பாடிக் கொண்டிருக்கும் நிலத்தைவிட்டு
அந்நியப்படைகளே
எப்பொழுது வெளியேறிச் செல்வீர்கள்?
வாழ்வை மூடியிருக்கும்
உங்கள் அதிகார நிழலை
எப்பொழுது விலக்கிக் கொள்வீர்கள்?

முதியவர்கள் சோர்வடைந்து
முடங்கியபடி காலத்தை கடக்கும் பொழுது
சிறுவர்கள் வளர்ந்து
நீங்கள் கொண்டு வந்த துப்பாக்கிகளையும்
பீரங்கிகளையும் முறித்துப் போடுவார்கள்

இந்தத் நிலத்தின் எல்லாத் தலைமுறைகளும்
நீயே யுத்தத்தை கையளிக்கிறாய்

எங்கள் சிறுவர்கள்மீது
துப்பாக்கிகளை நீட்டும்பொழுதில்
நடுநடுங்கித் துடிப்பார்கள் மூதாதையர்கள்

எனினும் சிறுவர்களுக்கு எதிராக
பீரங்கியை இந்நிலத்திற்கு
நீங்கள் கொண்டு வரும்பொழுது
கிளர்ந் தெழும் எங்கள் சிறுவர்கள்
முறித்துப் போடுவார்கள் அதை.

தீபச்செல்வன்

நன்றி : புது எழுத்து மார்கழி 2011

செவ்வாய், 6 டிசம்பர், 2011

கொல்ல முடியாத நாட்டில் குழந்தைகள் பிறக்கிறார்கள்


நேற்றும் சில குழந்தைகள் பிறந்தனர்
அவர்கள் அழுகிறார்கள்
அவர்கள் பெரிதாய் சத்தத்தோடு சிரிக்கிறார்கள்
குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள் தங்கள் கண்களால்
இந்த நாட்டைப் பார்க்கிறார்கள்
கைகளை அசைத்து கால்களால்
நடக்கத் தொடங்குகிறார்கள்
லட்சம்பேர் இறந்த பிறகும்
கொல்லப்பட முடியாத நாட்டில்
அங்கங்கள் பறிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்
ஆரோக்கியமாகப் பிறக்கின்றனர்
இந்தக் குழந்தைகள்
இப்பொழுதே பேசத் தொடங்குகிறார்கள்
நான் கேட்காத இன்னும் பல்லாயிரம் கேள்விகளை
அவர்கள் கேட்பார்கள்
நான் காணாத வாழ்வின் பகுதிகளை
அவர்கள் காண்பார்கள்
அவர்கள் சுகந்திரத்தைப் பெறுவார்கள்
ஏனெனில் கொல்லப்பட முடியாத
நாட்டின் செடிகளாக அவர்கள் பிறந்திருக்கிறார்கள்.

தீபச்செல்வன்

நன்றி : கல்கி

வெள்ளி, 2 டிசம்பர், 2011

பெரு வழியும் ஒரு கிண்ணம் தேனீரும்



பெரு வழியில் எத்தனையாயிரம்
மக்கள் நடக்கின்றனர்
யாரிடமும் கிண்ணங்கள் இருக்கவில்லை
துயரங்களை காலம் ஏந்திக் கொண்டிருந்தது
திரும்புவர்களும் பெயர்பவர்களும்
எதைப் பகிர்ந்து கொள்வது?
பல்லாயிரம் மையல்களில்
விரியும் வீதிகள் எப்படி உருவாக்கப்பட்டன?
அழிவின் மீதிகளைத் தவிர
எதுவும் வைக்கப்பட்டிருக்காத ஊரில்
பொறிகள் விதைக்கப்பட்டிருந்தன
அலைச்சலின் இறுதியில்
ஒரு கிண்ணம் தண்ணீருக்கு
சனங்கள் அடகு வைக்கப்பட்டனர்
அம்மா பசியோடு இருந்தாள்
பொதிகள் காய்ந்துபோயிற்று
இளைத்து தன் நிலத்தில் விழுகையில்
ஒரு கிண்ணம் தண்ணீர் கேட்டாள்
முட்கம்பிகளுக்குளிருந்து வெளியில் வர
ஒரு வழியும் கேட்டாள்
நிலத்தை மூடியிருந்த இரவில்
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து
ஒரு கிண்ணம் தேனீரோடு ஓடி வந்தேன்.

தீபச்செல்வன்

நன்றி : கல்கி

செவ்வாய், 22 நவம்பர், 2011

செங்காந்தள் பூக்கள்


நினைவு பூத்திருக்கும் கற்களை
வேர்களுடன் அகழ்ந்து உடைக்கையில்
ஆடியது நம் நிலம்
நிலம் எரிக்கப்பட்டு
கல்லறைகள் உடைக்கப்பட்டன
மறுக்கப்பட்ட இருப்பிற்காய்
போராடி மாண்டவர்களுக்கு
உறங்க இடம் மறுக்கப்பட்டிருக்கிறது
நிலத்தில் பெரும் பூதம்
நுழைந்து வேர்களைத் தின்றும்
கொல்ல முடியாத மரங்கள்
மீண்டும் தழைக்கின்றன
வீடுகளின் மூலைகளிலும்
தெருக்களின் சந்துகளிலும்
நகரங்களுக்கு மேலாயும்
கிராமங்களிலும் ஒளி ஊற்றெடுக்கிறது
வெளிச்சம் அணைக்கப்பட்ட
நிலத்தில் விளக்குகள் எரிகின்றன
உயிர்மரங்கள் தறிக்கப்படுகையில்
துடித்தன தாய்மார்களின் வயிறுகள்
காலம் சூழன்று கொண்டேயிருக்கிறது
அழிக்கப்பட்ட நிலத்தில்
செங்காந்தள் பூக்கள் பூத்திருக்கின்றன.

தீபச்செல்வன்

ஞாயிறு, 20 நவம்பர், 2011

பேய் நகரம் பேய் ஊர்

பேய்கள் நகரையும் ஊரையும் பாழாக்குகின்றன
உடைந்த வீடுகளின் மேலாய்
அமர்ந்திருந்து
சிதைந்த சுவர்களை தின்கின்றன
குண்டுகள் துளைத்த ஓட்டைகளால்
போய் வருகின்றன
சமையல் புகையிழந்த வீட்டில்
பேய் வாசனை மூடுகிறது
கரித்துண்டுகளால்
பேய்கள் எழுதுகிற கதைளால்
அதிர்ந்து கிடக்கிறது எம் நகரும் ஊரும்
குழந்தைகளில்லை
சைக்கிள்களில்லை
மாட்டு வாண்டிகள் இல்லை
யாரும் உள் நுழைய முடியாது பேயாழ்கிறது
பேய் நகர் என்றும் பேய் ஊர் என்றும்
மாற்றிக் கொள்கின்றன
அழிந்த கட்டிடங்களின் மீதேறி
பேய்கள் ஆடும் உக்கிர நடனங்களால்
அதிர்ந்து கிடக்கிறது எம் நிலம்.

தீபச்செல்வன்





நன்றி : தடாகம்

பூச்சி அரித்துண்ணும் நிலம்

வீடுகளை அரித்துண்ட பூச்சிகள்
பச்சை மரங்களுடன்
காய்ந்த தடிகளையும் தின்று முடித்து விட்டன
பெருகிய பூச்சிகளின் மேலால்
நடந்து திரியும் பெரும்பூச்சி
பூவரசுகளை தின்றாடுகிறது
கூர்வாள்களில் குழந்தைகளை தூக்கி எறிந்தாடுகின்றன.

கனவோடு நிலத்தில் புதைந்த
சனங்களை அடர்ந்த இரவுகளில்
தின்று சுவடுகளை தேடித் தேடி அரிகின்றன
பூச்சிகள் உதிர்க்கும் வண்ணங்களினால்
எம் நிலம் நிறம் மாறியிருக்கிறது.

சிதைக்கப்பட்ட கனவினை பெரும் மூட்டையாகி
உருட்டிக் கொண்டு செல்கிறது
எல்லாப் பூச்சிகளுடன் பசியுடன் அலைந்து
நிலத்தின் கிளைகளை அறுக்கின்றன
பெரும் பூச்சியோ
எல்லோரும் பார்த்திருக்க
அகன்ற வாய்களை திறந்து
பூர்வீக நிலத்தை அரித்துண்ணுகிறது.

தீபச்செல்வன்

நன்றி : தடாகம்

ஞாயிறு, 6 நவம்பர், 2011

தலை நிலத்தில் மலைகளை தின்னும் பேய்கள்


மலையும் சரிந்து கிடக்கிறது
நிலமும் சரிந்து கிடக்கிறது
கண் தளைத்த குளத்தில் முகம் கழுவ முடியாது
தாமரைகளில் பேய்கள் கண்மூடியிருக்கின்றன
கண்களற்று அலைந்து பேய்களில் மோதி விழுகிறோம்

கோணமலையில் ஒரு பெரிய பேய் அமர்ந்திருக்கிறது
தலை நிலத்தை நாளும் தின்னும்படி
அரசன் பேய்களுக்கு உத்தரவிட்டிருக்கிறான்
மலைகளை தின்று களிக்கும் பேய்கள்
தலை நகரத்தில் நடனமாடும் காலத்தில்
அகோரம் தாங்க முடியாது வாடுகின்றன முகங்கள்.

முதிய ஊரில் யாருமில்லை
சர்வ அழகான ஊரிலிருந்து துரத்தப்பட்டவர்கள்
அகதி முகாங்களிலிருந்து இன்னும் திரும்பவில்லை
மலைகளின் ஊரில் மலைகளுக்கடியில்
சூழ்ச்சிகளுடன் பேய்கள் உறங்குகின்றன
மலைகளையும் நிலத்தையும்
அரித்து அரசனுக்கு அனுப்புகின்றன.

மலைகளின்மீது கால் வைத்தலையும்
புத்தரின் நிழலில் பௌத்தக் கொடிகள் பறக்கின்றன
சிங்களம் பூசப்படும் தெருக்களில்
ஊர்கள் கொல்லப்பட்டு வேறு ஊர்களாக்கப்படுகின்றன
நமது முகங்கள் கண்களுடன் அழுகிப்போக
கண்தளைத்த குளத்தில் துவக்குகள் நீந்துகின்றன.

பாடற் தலத்தை புத்த சரணங்கள் தின்னத் துடிக்க
துறைமுகத்தில் மலைகளை திருடும் கப்பல்கள்
சுற்றி வளைக்கின்றன
மகாவலி ஆற்றில் பேய்கள் படகுகளில் வந்து குடியேறின
மாவிலாற்றில் எறியப்பட்ட நமதுயிர்கள் கடலினுள் மூழ்கின.

எங்கள் கோட்டையின் கொடியை தின்றுகொண்டிருக்கும்
பேய்களின் கொடி மாநிலத்தோடு தலை நிலத்தையும் மூடியிருக்கிறது
நரகங்களோடு தலைநகரத்தையும் மூடியிருக்கிறது
அடங்காக் கனவு பேய்களின் தீனியாக
ஆதி நிலத்து சனங்களுடன்
கொடியசைந்த மலைகளும் சரிந்தன
மாநிலமும் சரிந்தது.

27.02.2011


தீபச்செல்வன்

அம்ருதா செப்டம்பர் 2011

கொலையுண்ட நிலம்


முழுநிலமும் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர்
கனவின் வேர்கள் அழிப்பதற்காய் தேடப்படுகிறது
ஷெல்கள் துளைத்த சுவர்களிலும்
குண்டுகள் தின்ற வீடுகளிலும்
விமானங்கள் சிதைத்த வெளிகளிலும்
காயங்களிலிருந்து முளைவிடுகிறது கனவு.

ஊனமாக்கப்பட்ட வெறும் நிலத்தில்
உடைத்துக் கொண்டு வரப்பட்ட
புத்தரின் சமாதிக் கற்கள் சுவர்களாகின்றன
பூவரசகள் கொல்லப்பட்டு
அரச மரங்கள் நடப்படுகின்றன
கை நழுவிக் கரைந்து கசிந்து கொண்டிருக்கும் நிலத்தை   
தூங்கும் குழந்தைகள்
கைகளில் நிரப்பி வைத்திருக்கின்றனர்
ஈரமாக்கப்பட்ட நிலம் எப்பொழுது காயும்?

வேலிகளும் சுவர்களும் கூரைகளும்
வேறு விதமாய் வளர்ந்து
நிலத்தை கொல்லுகின்றன
துவக்குகள் நிலம் மேயும் காலத்தில்
நிலத்திற்காய் புதைந்த உயிர்கள்
மீண்டும் முளைக்கப் பார்க்கின்றன.

தீபச்செல்வன்

அம்ருதா செப்டம்பர் 2011

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...